Tuesday, March 20, 2007

நூதன முறையில் தமிழர்களுக்கு எதிரான போராட்டம்

கர்நாடகாவில், முக்கியமாக பெங்களூருவில் இந்த காவேரி பிரச்சினை வந்ததுக்கு அப்புறம் இந்த கர்நாடக மக்கள் என்னென்னவோ வழிகளில் காவேரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு அவங்க எதிர்ப்பை தெரிவிச்சுகிட்டு இருக்காங்க.சாலை மறியல், ரயில் நிறுத்தம் ,உண்ணாவிரதம்,கடை அடைப்பு இப்படி பல வழிகளில் போராட்டம் பண்ணியும் அவங்க எதிர்ப்பை சரியா காட்டலையோனு நெனச்சுட்டாங்களோ என்னவோ இப்ப ஒரு புது முறையில இந்த எதிர்ப்புப் போராட்டத்தை தொடங்கி இருக்காங்க.ஆனால் இந்த முறை இது நிச்சயமா தமிழர்களை மட்டும் இல்லாமல் அனைத்துப் பிரிவு மக்களையும் பாதிக்கிற விதமா இருக்கு.


கேபிள் டிவியில தமிழ் சானல்களை தடை செய்தும் , கடந்த ஒரு மாதமாக எந்த தமிழ் படமும் ரிலீஸ் செய்யாமலும் கூட தமிழர்களின் உறுதியை குலைக்க முடியாத கர்நாடக மக்கள் கடைசி ஆயுதமாக இதை கையில் எடுத்திருக்கிறாங்க.என்னனு கேக்கறீங்களா?.போன வாரம் நெறய சினிமா தியேட்ர்களில் ஒரே நேரத்துல "வீராச்சாமி " படத்தை ரிலீஸ் செஞ்சு இருக்காங்க.வேற எந்த தமிழ் படமும் ரிலீஸ் ஆகாத நெலமையிலே தெரியாம இதைப் போய் பார்க்குற மக்கள் எங்களுக்கு காவேரி தண்ணியே வேண்டாம் தயவு செஞ்சு இந்த படத்தை மட்டும் பாக்க சொல்லாதீங்க அப்படீனு கதறி அழுவுறாங்களாம்.








இந்த பிரச்சினைக்கு இப்படி ஒரு பயங்கர ஆயுதத்தை கையில் எடுத்து போராடுவதை எதிர்த்து பெங்களூருவில் உள்ள தமிழ் மக்களை எல்லாம் சேர்த்து கன்னட மக்களும் இந்தப் படத்தை கட்டாயம் பார்க்க வேண்டும் என்று ஒரு எதிர் போராட்டம் செய்யலாமா அப்படினு யோசிச்சுகிட்டு இருக்கேன்.பெங்களூரு மக்கள் யாராவது சப்போர்ட்டுக்கு வர்றீங்களா?.

டிஸ்கி :- இது ஒரு மொக்கை பதிவு.இதை ஏண்டா பதிவோட ஆரம்பத்துலயே சொல்லலைனு கேக்காதீங்க. அப்புறம் யாரு பதிவை படிப்பா?.துப்புறவங்க எல்லாம் தாராளமா துப்பிட்டு போகலாம்.

Tuesday, March 13, 2007

உலகக் கோப்பை திருவிழா


இன்னைக்கு ஒன்பதாவது கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகள் துவங்குது.எப்பவும் போல இல்லாமல் இந்தத் தடவை 16 அணிகள் துவக்க சுற்றில் ஆடுகின்றன.இதில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் அந்தஸ்து பெற்ற 10 அணிகள் தவிர புதிதாக 6 அணிகளும் விளையாடுகின்றன(Bermuda, canada, kenya, ireland, netharlands, scotland).இது வரை நடந்த உலகக் கோப்பைகளில் இதுவே அதிகபட்ச அணிகள் பங்கு பெரும் போட்டியாகவும்,மிக அதிக பட்ச போட்டிகள் நடைபெறும் போட்டியாகவும்(ஏறக்குறைய 50+ போட்டிகள் ) இருக்கப்போகுது.உலகில் அதிகபட்ச ரசிகர்களை கொண்டதும் அதிக நாடுகள் விளையாடும் கால்பந்து உலக கோப்பை கூட இத்தனை நாள் நடக்கறதில்லை.


இதில முதல் சுற்று போட்டிகளில் மிகப்பல போட்டிகளின் முடிவுகள் அநேகமா இப்பவே ஒரு மாதிரி தெரிஞ்சதுதான் .இந்த புதுசா விளையாடுற டீம்கள் நிலைமைதான் ரொம்ப கஸ்டம்.இந்த பெரிய டீம்களேல்லாம் அவங்களை விருந்தாகி இவங்க விழா பார்த்துருவாங்க. மைதானததுல எறங்குறப்பவே TV-ல பார்க்குற மாதிரி கூடி நின்னு கும்மி அடிக்கிறப்ப (Huddle talk) "மக்களே ,நமக்கு இன்னைக்கு நல்லதா ஒரு கோழி கெடச்சு இருக்கு. அதுவும் வெளிநாட்டு வெடக் கோழியா கெடச்சிருக்கு. பொறுமையா மசாலா தடவி நல்ல பதமா வறுக்கணும். என்ன ? "இது வரைக்கும் ஒரு ரெக்கார்டும் வைக்கலையேனு கவலைப்படுறவன் எல்லாம் இன்னைக்கு வச்சுருங்க.நல்ல சந்தர்ப்பம். "போனா வராது திரும்ப கெடைக்காது "அப்படின்னு ஊரில கடைத்தெருவுல கூவி சொல்ற மாதிரி சந்தோசமா சொல்லிட்டுத்தான் எறங்குறததே.எப்பவாவது இந்த சின்ன டீம் பசங்க நம்மளை அடிச்சு கெளப்பீறுவானுங்க.அப்பவெல்லம் "வீரனுக்கு இதெல்லாம் ஜகஜம் " அப்படினு நம்ம தலைவர் கைப்புள்ளே மாதிரி சொல்லிக்கிட்டு வர வேண்டியதுதான்.


சொல்லப்போனா ரெண்டாவது சுற்றுல இந்த சூப்பர்-8 வந்ததுக்கு அப்புறம்தான் உண்மையான உலக கோப்பை தொடங்குறதே.அநேகமா நம்ம குழுவுல இந்தியாவும், இளங்கயும் சூப்பர்-8 போயிடும்னு நினைக்கிறேன்.நம்ம பசங்க நல்ல சமநிலை(Balanced) உள்ள டீமாத்தான் போயிருக்காங்க.நம்ம "தலை" சச்சின் ," வங்கப்புலி" கங்குலி , "திரு.சுவரு" (Mr.Wall ..ஹி ஹி) திராவிட், அப்புறம் நம்ம சூழல் பந்து வீச்சாளர்கள் எல்லாம் என்ன பண்றாங்கன்னு பார்ப்போம்.முக்கியமா கடைசி உலகக்கோப்பை விளையாடப் போற தலை சச்சினும் , வங்கப்புலி கங்குலியும்.

ஒரு மாசம் முன்னாடி ஆஸ்திரேலியாதான் உலக கோப்பை ஜெயிக்கும் அப்படீங்கற நிலமை இருந்தது இப்போ வரிசையா வாங்கின ஆப்புகளால் ஆஸ்திரேலியா நொந்து நூடுல்ஸா போய் இருக்குறதுனால செளத் ஆப்ரிக்கா , இந்தியா , அப்புறம் நியுசிலாந்து இவங்களுக்கும் நல்ல சான்ஸ் இருக்கும் போல தெரியுது.சொந்த மைதானத்துல விளையாடுறதால வெஸ்ட் இண்டிஸ் அணிக்கும் கொஞ்சம் சான்ஸ் இருக்கு.

போட்டிகள் எல்லாம் நம்ம இந்திய நேரத்துல முன்னிரவு தொடங்கி பின்னிரவு(நள்ளிரவு?!) வரை இருக்குறதுனால இங்க நெறய பெருக்கு காலச்சக்கரமே மாறிடும்(என்னை மாதிரி ஆளுங்களுக்கு கேக்கவே வேணாம்). பள்ளி,கல்லூரி படிக்கிறவங்க , அப்புறம் அவங்க பெற்றோர் நிலைமைதான் ரொம்ப கஸ்டம். பசங்களா, TV எல்லாம் பார்க்காம ஒழுங்கா நல்லபடியா படிக்கிற வழியை பாருங்க(டேய் உன் அப்பா,அம்மா இப்படி எத்தனை தடவை சொல்லி இருப்பாங்க.என்னைக்காவது கேட்டுருப்பியாய? நீயெல்லாம் தயவு செஞ்சு கருத்து சொல்லாதேனு யாரும் சொல்லப்படாது)



இதுதான் இந்த உலகக் கோப்பையின் Mascot Mello




இது போட்டி அட்டவணை




இந்த தடவை நம்ம பசங்க ஜெயிச்சு வரணும்னு எல்லோரும் வேண்டிக்கிட்டு , திருவிழாவில கலந்துப்போம் வாங்க.

Thursday, March 08, 2007

நல்லா யோசிக்கிறாய்ங்க!!

பெங்களுரில் சென்ற வாரம் மஞ்சு என்கிற 5 வயது குழந்தை தெருநாய்களால் கடிபட்டு இறந்துவிட்டான். அது பற்றி ஏற்கனவே நான் ஒரு பதிவும் போட்டு விட்டேன்.அது பற்றி வந்த அறிக்கைகளில் ஒரு மிருகநல ஆர்வலர் இந்த தெருநாய்கள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றன என்று எழுதி இருந்தார்.ஒரு குறிப்பிட்ட ஏரியாவில் இருக்கும் தெருநாய்களுக்கு, தேவையான உணவை விடவும் கம்மியான அளவு உணவு கிடைக்கும் பொழுது அவைகளுக்கு உணவு தேடுவதில் போட்டி இருக்கும் (பிரின்ஸிப்பிள் ஆப் சர்வைவலாம். கிரகம்). அதனால் நாய்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் ஒன்றை ஒன்று எதிரி மனப்பான்மையில் பார்க்கும். ஆனால் பெங்களுர் போன்ற பெருநகரங்களில், தற்போது இருக்கும் டேக்-அவே உணவு பழக்த்தினால் , மிச்சப்படுத்தப்பட்ட நிறைய உணவுகள் அப்படியே குப்பையில் கொட்டபபட்டு விடுகின்றது. இதனால் நாய்களுக்கு அவைகளுக்கு தேவையானதை விட அதிக உணவு கஷ்டப்படாமல் கிடைக்கிறது( இது டிமாண்ட் அண்ட் சப்ளை). இதனால் நாய்களுக்கிடையில் போட்டி மனப்பான்மை ஒழிந்து கூட்ட மனப்பான்மை(Pack mentality) வளர்ந்து வருகிறது . இந்த கூட்ட மனப்பான்மை அவைகளுக்கு தனி வலிமையயும் ,ஆக்ரோஷத்தையும் கொடுக்கிறது.இதில் இந்த கூட்டத்தின் தலைமை நாய் கொஞ்சம் அதிக ஆக்ரோஷத்துடன் இருக்கும் பொழுது இது போன்று "விபத்துகள்" (சிறுவனின் மரணம்) நடக்கின்றன.

அதனால் ,நாய்களை இது போன்று கூட்டம் சேர விடாமல் செய்தால் அவைகள் அமைதியாக இருக்கும்.இது போன்ற விபத்துகளை நடக்காமல் தவிர்த்து விடலாம் என்று யோசனை சொல்லி உள்ளார். ஆஹா என்ன ஒரு யோசனை! , மாநகராட்சியில் இருந்து சிறப்புப்படை அமைத்து கூட்டம் சேரும் நாய்களிடம் சென்று "இங்க பாருங்க இப்படி எல்லாம் கூட்டம் போடக் கூடாது,அது உங்களுக்கும் ஆபத்து,எங்களுக்கும் ஆபத்து.அதனால எல்லோரும் அப்படியே கலைஞ்சு தனித்தனியா போய் உங்க வேலையப் பாருங்க" அப்படினு சொன்னா என்னமா இருக்கும்?.

ரூம் போட்டு உக்காந்து இது மாதிரி எல்லாம் யோசிப்பாய்ங்களோ?

Friday, March 02, 2007

தெருநாய்களின் அட்டூழியம்

பெங்களூரில் நேற்று மஞ்சு என்கிற 5 வயது குழந்தை நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த பொழுது தெரு நாய்களால் கடிபட்டு இறந்து விட்டது.கடந்த இரண்டு மாதங்களில் நடந்த இரண்டாவது துர்சம்பவம் இது. சென்ற முறை இது போன்ற சம்பவம் நடந்தவுடனேயே சுதாரித்திருக்க வேண்டிய அரசு எந்திரங்களும், அதிகாரிகளும் இதை பற்றி இன்னும் கவலைப்படாமலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமலும் இருப்பது கவலை அளிப்பதாக உள்ளது.இதில் என்னை மிகவும் கோபப்பட வைப்பது இந்த மிருகநல ஆர்வலர்களின் வாதங்கள்தான்.தெரு நாய்களை கொல்லக் கூடாது.அவற்றுக்கு ஒரு துன்பமும் வரக்கூடாது என்று கோஷம் போட்டுக்கொண்டு உள்ளனர்.


கர்நாடக அமைச்சர் இறந்த குழந்தையின் பெற்றோர்களுக்கு ஒரு லட்சம் நிதி உதவி அளிப்பதாக சொல்லி உள்ளாரே தவிர தெருநாய்களின் தொல்லையை அழிக்க என்ன செய்ய போகிறார்கள் என்று ஒரு வார்த்தை சொல்லவில்லை.இன்னும் ரெண்டு நாட்களுக்கு செய்தி ஊடகங்களும் இதை பற்றி பேசி விட்டு நாளை ஏதாவது ஒரு நடிகையின் நாய்க்கு உடம்பு சரியில்லை என்றால் அதைப் பற்றி செய்தி எழுதப் போய்விடுவார்கள் . நேற்று அந்த குழந்தை பற்றி நானும் நண்பன் ஹரியும் பேசிக்கொண்டிருந்த போது ஹரி சொன்னான் "15 நாய்கள் கடிச்சிருக்கும் போது அந்த குழந்தைக்கு எப்படி வலிச்சிருக்கும்" .வேணாம்டா சாமி, நினைக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு.அந்த குழந்தைக்கு என்ன தெரியும் பாவம்.டே அப்பா, மிருகநல ஆர்வலர்களே, தெருநாய்களை பத்தி கோஷம் போடுறதுக்கு முன்னாடி அந்த குழந்தையின் வலி பற்றியும், குழந்தையின் பெற்றோர்கள் இனி மேல் அனுபவிக்க போகும் இழப்பின் வலியையும் கொஞ்சம் யோசிச்சுட்டு கோஷம் போடுங்கப்பா.இல்லைனா தயவு செஞ்சு இந்த தெரு நாய்களை எல்லாம் உங்க வீட்டுக்கு எடுத்துட்டு போய் சந்தோசமா வளர்த்துக்கோங்க.ஆனா எல்லா நாய்களையும் கூட்டிட்டு போயிடுங்க.

சட்டப்படி பார்த்தாலும் இதே குற்றத்தை (குழந்தையை கொன்றதை) ஒரு மனிதன் செய்திருந்தால் அவர்களுக்கு நிச்சயம் மரண தண்டனை கொடுக்கலாம்.ஆனால் நாய்களை மட்டும் ஒண்ணும் செய்ய கூடாதாம்.மிருகநல ஆர்வலர்களுக்கு வேண்டுமானால் ஒரு குழந்தையின் உயிரும்,நாயின் உயிரும் சமமானதாக இருக்கலாம்.எனக்கு, ஒரு நாயின் உயிரும் மதிக்கத்தக்கதே என்றாலும் , ஒரு குழந்தையின் உயிருக்கு சமமானதல்ல. இத்தனை தெருநாய்களை பெருக விட்டு அதை வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கும் மாநகராட்சி மற்றும் அதன் ஊழியர்களும் இதில் மிக வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியவர்களே. தண்டிக்கப்பட வேண்டியவர்களும் கூட.

இதில் மக்களின் குற்றமும் உள்ளது(என்னையும் சேர்த்து).யாரும் தெருநாய்களின் தொந்தரவு பற்றி ஆரம்பத்திலேயே புகார் கொடுப்பதில்லை. மீண்டும் இப்படி ஒரு நிகழ்ச்சி நடப்பதற்க்கு முன் மக்களோ, மாநகாராட்சியோ, செய்தி ஊடகங்களோ,மிருகநல ஆர்வலர்களோ இதற்கு தயவு செய்து ஒரு தீர்வு கண்டுபிடித்து விடுங்கள்.இன்னொரு குழந்தையின் கடிபட்ட சடலத்தை செய்தித்தாளில் பார்க்கும் தைரியம் எனக்கு இல்லை.உங்களில் நிறைய பேருக்கும் இருக்காது என்று நிச்சயம் நம்புகிறேன்.

Thursday, March 01, 2007

மத்திய பட்ஜெட் -2007

நேத்து நம்ம நிதி அமைச்சர் திரு பா.சிதம்பரம் 2007-ம் வருசத்துக்கான மத்திய பட்ஜெட்-இ நாடாளுமன்றத்தில் சமர்பித்தார்.இதையும் நல்லாப் படிச்சு அதை பற்றி அலசி ஆராய்ஞ்சு ஒரு பதிவு போடலாம்னு முடிவு பண்ணி ,நம்ம நிதி அமைச்சரோட பட்ஜெட் சமர்பபண அறிக்கையை படிக்கலாம்னு நம்ம கணிணில விரிச்சா ரெண்டு வரி படிச்சசவுடனே கண்ணு கெறங்கி தலை சுத்திக்கிட்டு வருது.தூக்கமா இல்லை ஒண்ணும் புரியலயானு தெரியல.அப்புறம் சரி நமக்கு எதுக்கு இந்த விஷப்பரிட்சை,தீர்ப்பை நம்ம வாசக அன்பர்கள்களிடமே விட்டுடலாம்னு முடிவு பண்ணிட்டேன்.Mr.P.சிதம்பரத்தோட பட்ஜெட் சமர்பபண அறிக்கையை படிக்க இங்கே சொடுக்கவும்.


இருந்தாலும் Education cess-ஐ 2%ல இருந்து 3% ஆக உயர்த்தியதையும் ,Employee Stock Options-ஐ fringe benifits-க்கு கீழே கொண்டு வந்ததையும் மட்டும் உடனடியா எதிர்க்கிறேன்.